Saturday, January 1, 2011

திருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு, வைணவச்சிம்மம், ஸ்ரீ கிருஷ்ணன் தூது

திருப்பல்லாண்டு அவதரித்த வரலாறு

    ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எங்கு பாடினார்  எந்த சந்தர்ப்பத்தில் பாடினார் என்பது பலருக்கும் தெரியாது. அதைப்பற்றி இங்கு காண்போம். மதுரையை வல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்த காலம். அவனுக்கு பரம்பொருள் யார் (எங்கும் பரந்து எதிலும் நிறைந்து என்றும் நிலைத்திருப்பது யார்) என்ற ஐயம் இருந்தது. எனவே பரம்பொருள் யார்? என்பதை நிர்ணயம் செய்யும் பொருட்டு பண்டிதர்களின் கூட்டத்தைக்கூட்டி விவாதிக்கச் செய்தான் மன்னன். யார் சரியாக நிர்ணயம் செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசாக பொற்கிழி (தங்கக்காசுகள் கொண்ட முடிப்பு) வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தான். அக்கூட்டத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் கலந்து கொண்டு வேத, சாஸ்த்ர, இதிகாச புராணங்களை மேற்கோள் காட்டி திருமாலே பரம்பொருள் என்பதை நிர்ணயித்த சமயத்தில் ஒரு கழியில் கட்டியிருந்த பொற்கிழி தானாகவே பெரியாழ்வாரின் கரங்களில் வந்து சேர்ந்தது. மன்னனின் சந்தேகம் தீர்ந்தது. மன்னன் பெரியாழ்வாரை பெருமைப்படுத்த யானையின் மேல் ஏற்றி மதுரை மாநகரில் வலம் வந்தபோது திருமால் கருடன்மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அங்கிருந்த அனைவருக்கும் காட்சி கொடுத்து நானே மெய்! (பரம்பொருள்) என்று காண்பித்தார். எல்லாருக்கும் காட்சி தந்த பகவானுக்கு கண் திருஷ்டிபடக்கூடாது என்று எண்ணி யானையின் மேல் தொங்கும் மணிகளையே தாளமாகக் கொண்டு பகவானுக்கு திருப்பல்லாண்டு பாடினார். அவ்விடம்தான் மெய்காட்டிய பொட்டல் (உண்மையை காட்டிய இடம்) என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இவ்விடம் மதுரை அருள்மிகு கூடழலகப்பெருமாள் திருக்கோயிலுக்கு கிழக்கே தற்பொழுதுள்ள ஜான்சிராணி பூங்கா. மெய்காட்டிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகுண்டஏகாதசிக்கு முந்திய பிரதமையில் பல்லாண்டு தொடக்கமாக இரவு சுமார் 9.00 மணியளவில் நடைபெறும். இவ்வருடம் 06.12.2010 அன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
                    தகவல்: வி.ரெ. அஜய்கிருஷ்ணா, TVS Matric HIgher Sec Shool,மதுரை
                    படம் உதவி: ஹரி ராமாநுஜதாஸன், மதுரை





வைணவச்சிம்மம்

    கவலைப்படாதே ஆசிரியர் ஸ்ரீ மாந். வைணவரத்னா ஸ்ரீ ராமுலு அவர்களுக்கு இவ்வாண்டு சென்னை நம்மாழ்வார் பவுண்டேஷனின் வைணவச்சிம்மம் விருது வழங்கப்பெற்றது. சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக வைணவத்தின் சிறப்பினை நாடறியப் பரப்பி வரும் இந்த ஸ்வாமி வடமொழி தென்மொழியோடு ஆங்கிலப்புலமையும் நிரம்பியவர். பகவத் கீதையில் ஆழங்கால்பட்டவர். ஸ்ரீ ரங்கம் நரசிம்மாச்சாரியார் ஸ்வாமியிடம் பாடங்கேட்டவர். பல நூல்களை எழுதியவர். இந்த வயதிலும் உற்சாகமாக பல வைணவ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர். தோற்றத்திலும், பேச்சிலும், எழுத்திலும் சவாலை எதிர்கொள்வதிலும், நடையாலும், சிம்மம் போன்ற ஸ்ரீ ராமுலு சுவாமிகளுக்கு வைஷ்ணவச் சிம்மம் விருது 16.12.2010  அன்று வழங்கப்பட்டது. எத்தனைப் பொருத்தம்? விருது வழங்கியவர்களுக்கும், பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.



ஸ்ரீ கிருஷ்ணன் தூது

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பஞ்ச பாண்டவர்களுக்காக தூது வந்தான். அங்கே பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் கிரஷ்ணரை வரவேற்கிறார்கள். பகவான் அவர்களை நலம் விசாரித்து அனுப்பிவிட்டு நேராக விதுரன் மாளிகைக்குப் போகிறார். விதுரனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. நாம் எதிர்பார்க்காதபோது யார் நம் வீட்டுக்கு வருகிறார்களோ அவர்களையே "அதிதி" என்கிறோம். வருபவர்கள் பகவானாகவும் இருக்கலாம் அல்லவா! (அதிதி தேவோ பவ!) இங்கே பகவானே விதுரருக்கு விருந்தாளியாக வந்தான். இது என்ன பாற்கடலா! ஆதிசேஷனாகிய அற்புதப்பள்ளி அணையா? பச்சை ஆலிலையோ! சொன்ன நால்வகைச் சுருதியோ! கருதி இங்கு எழுந்தருளியமைக்கு என்ன மாதவம் செய்தது இக்குடில்! வில்லிபுத்தூராழ்வாரின் கவிதை நயத்திற்கு எடுத்துக்காட்டு!
    என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்? - இன்னொரு வகை.
    என்னமா தவம் செய்தது இச்சிறுகுடில்?
    நடக்காது (பகவான் வருவானா) என்கிற கேள்விக்குறி நடந்து விட்டால் வியப்புக்குறியல்லவா!
                        - சடகோப கல்யாணராமன். திருவெள்ளக்குளம்.
           

No comments:

Post a Comment