Saturday, January 1, 2011

என்ன வழி? - தலையங்கம்

    நாம் இந்த நிலவுலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
    உலகியல் கடமைகளை எல்லாம் செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது.
    தினசரி செய்தித்தாளையோ, தொலைக்காட்சி செய்திகளையோ பார்த்து நாட்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    ஒவ்வொரு நாள் செய்திகளையும் பார்க்கின்றபொழுது - கலியுகத்தின் முழு பரிமாணத்தையும் உணர முடிகிறது.
    பதட்டமான வாழ்க்கை ..... யாருமே தங்கள் வாழ்க்கை பத்திரமாக இருப்பதாக உணர முடியாத நிலை...... தேவைக்கு அதிகமான பொருளும் வசதிகளும் இருந்தும் ஏதோ இழந்து விட்டவர்கள் போன்ற சோகம்.....
    அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் கூட பகவான் இருக்கிறான்; பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கையோடு வாழ்ந்த காலம், கொஞ்சம் கொஞ்சமாக மலையேறிக்கொண்டிருக்கிறது. 100 கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பவன் கூட போதவில்லை என்கிறான். அது மட்டுமல்ல இருக்கிறது போதாது என்று நினைத்து அசுரவேகத்தில் எந்த விதிமுறை தர்மங்களையும் அனுசரிக்காது குவித்துக்கொண்டே போகிறான். மருத்துவர்கள், நீதிபதிகள், கல்விமான்கள் என எங்கேயும் காசாசையும் ஊழலும் நாளுக்கு நாள் பெருகி வருவதைக் காண்கிறோம்.
    தப்பு செய்கின்றவர்களைப் பிடித்து தண்டிக்க முடிவதில்லை.
    100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன் பிடிபட்டு விடுகிறான். கோடி கோடியாகக் குவித்தவன் எந்தப் பாவத்திலிருந்தும் தப்பித்து விடுகிறான்...
    இதனை எப்படிச் சரிசெய்வது? சட்டங்கள் இயற்றியா? வழக்குகள் போட்டா?
    ஒரே வழி தான். ஆன்மிகம். ஒரு மனிதனின் ஆன்மிக உணர்வு - தூண்டப்பட்டு அவன் இயங்காத வரையில் இது நடக்காது. அவன் தானாகவும் திருந்த மாட்டான்; பிறராலும் திருத்த முடியாது;  நம்முடைய அந்தராத்மா நமது ஒவ்வொரு செயல்களையும் கவனிக்கிறது. அது நம்மை எப்படியும் தண்டித்து விடும்; நம்மை அமைதியிழக்கச் செய்து விடும்; என்ற எண்ணம் ஏற்படாத வரையில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.
    இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்.... உண்மையான தீர்வினை உணர்வீர்கள்.... பிறரையும் உணரச் செய்வீர்கள்.....

No comments:

Post a Comment