Saturday, January 1, 2011

கண்ணன் பிறந்தான்


   - எஸ். சுதர்சனம், நங்ககைநல்லூர்

                                       யசோதை கண்ட விஸ்வரூப தரிசனம்
    திருணாவர்த்தன் என்னும் புயல்வடிவு கொண்ட அசுரனை அழித்த கண்ணன் யசோதையின் மடியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அசுரனைக் கொன்ற களைப்போ என்று நினைத்து வியந்தாள் யசோதை. சற்றே கண் விழித்ததும் கண்ணனுக்குப் பாசத்துடன் பாலூட்டினாள்.
    "ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
    இரு முலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே"
    மார்பகங்களில் தாய்ப்பால் சரியாக வராதபோது மார்பகங்களை முட்டி முட்டி பாலுண்ணும்போது தாய் பெறும் இன்பத்திற்கு எல்லையே இல்லை. பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அந்த இன்ப நுகர்ச்சியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எப்படி யசோதை வேண்டினாளோ அப்படியே பாலுண்டான் கண்ணன் என்று நினைக்கத் தோன்றுகிறது. பால் மிகுதியால் குழந்தை மூச்சுத்திணறிக் கொண்டே மாறி மாறி பாலைச் சுவைக்குமாம். பெரியாழ்வாரின் பத்துப் பாசுரங்கள் - தன்னை யசோதை பிராட்டியாகவே நினைத்துக் கொண்டு, குழந்தையை பாலுண்ண அழைக்கும் பாசுரங்கள். இப்பாசுரங்களை சொல்லிக் கொண்டே குழந்தைக்குப் பால் கொடுத்தால் தாய்க்கும் சேய்க்கும் என்றென்றும் சுகம் உண்டாகும் என்று ஞானிகள் உபதேசம் செய்கிறார்கள். பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையின் அருமை! குழந்தைக்குத் தீங்கு வந்துவிடுமோ! என்று ஒரு பக்கம் கலக்கம். குழந்தையின் புன்சிரிப்பையும் அழகையும் கண்டு ரசித்துக் கொண்டே குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். குழந்தை வாய் திறந்து கொட்டாவி விடுகிறான். குழந்தை வாயினுள் யசோதை அனைத்து உலகங்களையும் கண்டாள். 

ஆகாசம்,அந்தரிக்ஷம், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், அக்னி, வாயு, சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், நதிகள், வனங்கள் அனைத்தையும் கண்டாள். யசோதை கண்ட ஆச்சரியத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமோ? சற்று மயக்க நிலையைக் கூட அடைந்தாள் என்று கூறலாம். "வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே" என்று பாடுகிறார் பெரியாழ்வார்.
   "அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
    கண்டம் இருந்தவா காணீரே! காரிகையீர் வந்து காணீரே!"

    என்று பாடுகிறார். அண்ட பகிரண்டம் அனைத்தும் விழுங்கிய கழுத்தின் அழகைக் காண நம்மையும் அழைக்கிறார் ஆழ்வார்.
    அனைத்துலகையும் அமுது செய்தருளின கண்டம் - திருக்கழுத்தின் அழகை திருப்பாணாழ்வார் எப்படி அனுபவிக்கிறார் என்று பார்ப்பபோமா?
    அண்டரண்ட பகிரண்டத்தொரு மாநிலமெழுமால் வரை முற்றும்
    உண்ட கண்டங் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
    அமலனாதிபிரான் என்னும் பாசுரத்தில் இப்படி அனுபவம். அண்டத்தில் வாழும் தேவர்கள் மனிதர்கள், திர்யக், ஸ்தாவரம் என்னும் நால்வகைப்பட்ட ஜீவர்களையும் அவர்கள் வாழுமிடமான அந்த அண்டங்களையும், அந்த அண்டங்களைச் சுற்றியிருக்கும் ஏழு ஆவரணங்களையும், அந்த அண்டங்களுக்கு உள்ளிருக்கும் ஐம்பது கோடி விஸ்தீர்ணமுடைய பெரும்பூமியிலும், குலமலைகளாலும், உபலக்ஷண முறையிலே காட்டப்படும் காரியப்பொருள்கள் அனைத்தையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷிப்பதற்காக விழுங்கிய எம்பெருமானின் திருக்கழுத்தை அனுபவிக்கிறார் திருப்பாணாழ்வார்.
    மற்றொரு சம்பவம். கோபச் சிறுவர்களுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவர்கள் யசோதையிடம் வந்து கண்ணன் மண் தின்றான் என்று புகார் செய்தார்கள். கண்ணனைக் கூப்பிட்டாள் யசோதை. மண்ணைத் தின்றாயா? என்று கோபத்துடன் கேட்டாள். இல்லையே என்றது குழந்தை. வாயைத் திற. நானே எது உண்மையென்று பார்க்கிறேன் என்று யசோதை சொன்னதுதான் தாமதம். ஸ்ரீ ஹரி லீலா மாநுஷ பாலகன் வாயைத் திறந்து காட்டினான். அழியா சகல ஐச்வர்யங்களையும் உடைய கண்ணன் வாயைத் திறந்து காட்டினான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். லீலா ரஸத்துக்காகவே மானிட உருவில் அவதரித்த குழந்தையாயிற்றே! யசோதை கண்ணன் வாயில் ஸர்வ ஜகத்தையும் (விஸ்வம்) கண்டாள். அசையும், அசையாத பொருட்கள், பர்வதங்கள், தீவுகள், ஸ்வர்கலோகம் போன்ற எல்லா லோகங்களையும் கண்டாள்! விசித்ர தர்சனம்!
                                        - தொடரும்.

No comments:

Post a Comment