Saturday, January 1, 2011

எம்பார் வைபவம்

     இராமாநுஜரைக் காப்பாற்றி வைணவ சமயத்துக்கும் ஏன் உலக மக்களுக்கும் உயர்ந்த தொண்டு செய்யும் பேறு இருவருக்குக் கிடைத்தது. ஒருவர் திருநாமம் எம்பார். இன்னொருவர் திருநாமம் கூரத்தாழ்வான்.
    யாதவப்பிரகாசரின் சூழ்ச்சியால் ஆபத்தைச் சந்திக்கவிருந்த இராமாநுசரை எச்சரித்துக் காப்பாற்றி காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தவர் எம்பார். இவர் இராமாநுசரின் பிரதான சீடர் மட்டுமல்ல. இராமாநுசரின் சிறிய தாயாரின் குமாரர்.
    கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயருடைய இவருக்கு எம்பெருமானார் என்ற தனது பெயரையே அளித்தார் இராமாநுசர். அதனைச் சுருக்கி எம்பார் என்று அழைக்கப்பட்ட இவர் பெருமை சொல்லில் அடங்காதது.
    வைணவ ஆசார்யர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல அருளிச்செயல் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்று வாழ்ந்தவர்கள் அல்ல வைணவ ஆசாரியர்கள்.
    எனவே இவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் வைணவ மரபை அழகாக விளக்குகின்றன. இவர்களின் மேதா விலாசத்தையும், எளிமையான வாழ்க்கையையும், நாம் புரிந்து கொண்டு பின்பற்றுவதற்கு முயற்சிக்க இக்குறிப்புக்கள் பேருதவி செய்கின்றன.
    உதாரணமாக,
    பெரிய திருமொழியில் ஒரு பாசுரம். திருவாலி திவ்ய தேசத்திற்குரிய  பாசுரம். பகவான் தன் மனத்தில் இருந்தாலும், அவனைக் கலந்து அனுபவிக்க ஆசைப்படுகிறார் ஆழ்வார். ஞான தசையைக் கடந்து பிரேம தசை வந்து விடுகிறது. ஆழ்வார் நாயகி பாவத்தில் பாட ஆரம்பிக்கிறார். ஒரு வண்டினை அழைத்து, "ஏ வண்டே! வயலாளி மணவாளன் என்னைக் கவனிக்காது - என் பசலை நோயைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே! நீ போய், அவனையே நினைத்து நினைத்து உள்ளம் தடுமாறி, பசலை நோயினால் துன்புற்றிருக்கும் என் நிலைமையை எடுத்துரைப்பாய்சு என்கிறார். பாடல் இது.
    பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
    அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே
    மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
    பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!

    அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.
    எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர்.
    அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா செய்யப் போகிறது.
    வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை.
    வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்!
    எம்பாரின் திருவடிகளையும், அந்த வம்சத்தில் வந்த மேலத்திருமாளிகை ஆசாரிய வம்சத்தவர்கள் திருவடிகளுக்கும் பல்லாண்டு பாடுவோம்.

1 comment:

  1. தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

    ReplyDelete