Saturday, January 1, 2011

ஆலிலை மேல் பள்ளி கொண்ட அழகிய பாலகன்

                                                     -  G.R. சுப்பிரமணியன், மதுரை


    அந்தக் குழந்தையைப் பார்த்தவர் மனம் பரவசமடையும். தெய்வீகக் குழந்தை. எடுத்துக் கொஞ்சலாம் போல கொள்ளையழகு. கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கத்தோன்றும். துருதுருவென விழிகள். சின்னச் சின்ன கைகள்; பிஞ்சு விரல்கள்; சின்னச் சின்ன சங்கு சக்கரங்கள்; மார்பில் ஸ்ரீ வத்ஸமாலை. கழுத்தில் கௌஸ்துப மணி. இடுப்பில் அழகிய சின்ன பட்டு பீதாம்பரம். மரகதவண்ண மேனி; நீருண்ட மேகம்போல குளிர்ச்சியான நீல மேக ஸ்யாமளன். பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும் பாலகன்.
    ஆம். அவன் தான் பாலகிருஷ்ணன். தேவகி - வசுதேவன் மைந்தனாகப் பிறந்து கோகுலத்தில் யசோதை -நந்தகோபன் பாலனாக வளரும் அதிசயக்குழந்தை
    அழகிய திருமுக மண்டலம். நீலோத்பல மலர்கள் போன்ற திவ்ய நேத்திரங்கள். அழகான திருமார்பு. அழகான கைகள். சக்கரரேகை ஓடும் அழகிய பாதங்கள். அடேயப்பா! என்ன அழகு! என்ன அழகு!
    சாதாரணமாக குழந்தை பிறந்த பின்பே, பெற்றோர் அதற்குத் தங்க ஆபரணங்கள் சூட்டி அழகு பார்ப்பார்கள். இதுவோ வித்தியாசமான தெய்வக் குழந்தை. பிறக்கும்போதே நிறைய பொன்னாபரணங்களுடன் பிறந்த குழந்தை. விலையுயர்ந்த நகைகள் என்ன? கிரீட, குண்டலங்கள் என்ன? கால்களில் வெள்ளிக் கொலுசு என்ன? இடுப்பில் புல்லாங்குழல் என்ன? சுருள் சுருளாக கரு, கருவென கருத்த அடர்த்தியான கேசம் என்ன? கழுத்தை அலங்கரிக்கும் மணி மாலை என்ன? இடுப்பில் ஒட்டியாணம் என்ன?கைகளில் வளையல்கள் என்ன? தலையில் மயிற்பீலி என்ன? கண்ணன் திவ்யாபரணங்களை அணிந்தால் அவற்றிற்கு அழகா? அல்லது ஆபரணங்களால் அவனுக்கு அழகா? என்ன சொல்வது?



    உதட்டில் எப்போதும் புன்னகை. பிரசன்ன வதனம். அவனது புன்சிரிப்பு அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுமே! இந்த அழகிய திருமேனியைப் பார்த்துத்தானே ஆண்டாள் நாச்சியார், கிருஷ்ண சைதன்யர், ஜயதேவர், லீலாசுகர், பாரதியார் ஆகியோர் மெய்ம்மறந்து போனார்கள்.
    அந்தக் குழந்தை ஆலிலைமேல் பள்ளி கொண்டிருக்கிறது. கால் கட்டை விரலை எடுத்துத் தன் பிஞ்சு வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறது.
    வாமனனாய், குள்ளனாய் வந்தபோது மூவடி மண் கேட்டு பலியிடம் யாசகம் வேண்டியபோது, ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து, இன்னொரு பாதத்தைப் பிரம்மலோகம் வரை தூக்கி நின்றான். மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று பலியிடம் கேட்ட போது,  பலிச்சக்கரவர்த்தித் தன் சிரசைக் காட்டினான். பலியின் சிரசில் தன் திருவடியைப் பதித்து, அவனது ஆணவத்தைப் போக்கி, தடுத்தாட்கொண்டான்.
    தூக்கிய திருவடியைக் கண்ட பிரம்மன், அந்த அழகிய திருப்பாதங்களைப் புனித நீரால் அபிஷேகம் செய்தான்.
    இராமனாக அவதரித்தபோது, இந்தத்திருவடிகள் தானே அகலிகையின் சாபத்தைப் போக்கியது.
    கங்கையைக் கடக்க இராமன் படகில் ஏறும் முன், குகன் அவனது பாதங்களைக் கழுவ விரும்பினான். ஏன் அப்படி என்று இராமன் கேட்க, ஏற்கனவே உன் திருவடிபட்டு ஒரு கல் பெண்ணானாள். என்னுடைய படகோ மரத்தால் ஆனது. நின் திருவடிபட்டு, அதுவும் பெண்ணானால் நான் பிழைப்புக்கு என்ன செய்வது? ஆகவே நின் திருவடிகளைத் திருமஞ்சனம் செய்ய விரும்புகிறேன் என்றான். குகனின் இந்தச் சாதுர்யமான வார்த்தைகளைக் கேட்ட இராமன் மனம் மகிழ்ந்து. தன் பாதங்களை அபிஷேகம் செய்யச்  சம்மதித்தான்.
    இப்படி எல்லோரும் திருவடிகளைப் போற்றுகின்றார்களே! அதில் என்ன தான் இருக்கிறது என்று அறிய கண்ணன் தன் கால் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டானாம்.
    இதைப் பக்தன் பார்த்தான். மெய்ம் மறந்து பாடுகிறான்.
    கரார விந்தனே பதார விந்தம்
    முகார விந்தே விளி வேஸயந்தம்
    வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
    பாலம் முகுநிதம் மனசாஸ் மராமி
    ஆலிலை மேல் துயில் கொள்ளும் பாலகோபாலன் தன் கையாகிய தாமரையால், காலாகிய தாமரையை எடுத்து முகமாகிய (வாய்) தாமரையில் வைத்துச் சுவைத்துப் பார்க்கின்றான்.
    அந்த அதிசய பாலமுகுந்தனை நாம் மனதாரப் போற்றுவோம்.

No comments:

Post a Comment